'அரசாங்கத்தின் பழிவாங்கலுக்குள் சிக்கியுள்ள பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் முதுகில் குற்றவியல் பிரேரணை எனும் சிலுவை ஏற்றப்பட்டுள்ளது. அதிலிருந்து அவரைக் காப்பாற்ற மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்' என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
'அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' என்ற தலைப்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'ஏழை மக்களின் பணத்தை சூறையாட நினைக்கும் அரசின் திவிநெகும சட்டமூல நிறைவேற்று முயற்சி நீதிமன்ற தீர்பினால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. இது இந்த முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டும்.
இந்த திவிநெகும சட்டமூலத்துக்கு எதிராக பிரதம நீதியரசர் கொடுத்த தீர்ப்பினால் இந்த அரசாங்கம் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. இதனால், அவரைப் பழிவாங்கும் வகையிலேயே குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்கள் ஆணைக்கு எதிரானதாகும். பிரதம நீதியரசரின் முதுகில் ஏற்றப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை சிலுவையிலிருந்து மீட்டு அவரைக் காப்பாற்றும் பொறுப்பு மக்களுக்குரியது. அதற்காக மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.