பிரதம நீதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையை பரிசீலனை செய்ய நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சட்ட அதிகாரம் இருக்க வேண்டும் என ஐ.தே.க. இன்று தெரிவித்துள்ளது.
பிரதம நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்க அல்லது அவற்றை முறையாக நிரூபிப்பதற்கு இவ்வாறான அதிகாரங்கள் மிக அவசியம் என ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கூறினார்.
நீதித்துறை உத்தியோகத்தர்களை குற்றப்பிரேரணை மூலம் பதவியிறக்கும் செயன்முறையின்போது, தெரிவுக்குழுவுக்கு சட்ட அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தால் ஏற்கப்பட்டுள்ளது.
தெரிவுக்குழுவுக்கு 9 பேர் நியமிக்கப்பட்டால் அதில் அரசாங்க உறுப்பினர்கள் 5 பேரும் எதிரணி உறுப்பினர்கள் 4 பேரும் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.
இவ்விகிதத்தை அரசாங்கம் ஏற்க மறுத்தால் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவுக்குழுவை பகிஷ்கரிக்குமா எனக் கேட்டபோது இல்லை என பதிலளித்த திஸ்ஸ அத்தநாயக்க, நாம் பகிஷ்கரித்தால் அரசாங்கத்தின் முழுக்கட்டுப்பாட்டில் தெரிவுக்குழு போய்விடும் என கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் இக்குற்றப்பிரேரணையை இரகசியமாக ஆதரிப்பதாக வந்த வதந்தியை திஸ்ஸ அத்தநாயக்க மறுத்தார். தெரிவுக்குழு நடுநிலையானதாக, சுயேட்சையானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியவர் ரணில் விக்கிரமசிங்கதான் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.