அபூதாபியில் உள்ள அல்-அய்ன் நகரில் நேற்று முன்தினம் காலை துப்புரவு செய்யும் நிறுவனத்திலிருந்து 45 ஊழியர்கள் பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பின்னால் வந்த பெரிய மணல் லொறி கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது பயங்கரமாக மோதியுள்ளது. பஸ்ஸில் பயணித்த 24 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன் போது பஸ் வண்டி லொறி வண்டிக்கு கீழ் சிக்குண்டு முழுமையாக சேதமடைந்துள்ளது. விபத்து இடம்பெறும் போது லொறி வண்டியில் மணல் மற்றும் கட்டுமானப் பொருட்கள் உட்பட 75 தொன் பாரம் நிரப்பப்பட்டிருந்தது.
இந்த விபத்தில் 16 பங்களாதேஷ் நாட்டவர் கொல்லப்பட்டதாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான பங்களாதேஷ் தூதரகம் உறுதி செய்துள்ளது. இதில் ஒரு இந்திய நாட்டவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பாதிக்கப்பட்ட தமது நாட்டினர் குறித்து கண்டறிய குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வருவதாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான பாகிஸ்தான் தூதுவர் ஜமில் அஹமத் கான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த பலர் தவாம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தின் போது லொறி மோதி கீழே கொட்டிய மணலில் பலர் புதைந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அபூதாபி போக்குவரத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மொத்த சனத்தொகை 8 மில்லியனுக்கு அதிகமாகும். ஆனால் அங்கு மில்லியன் கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் தெற்காசிய நாடுகளை சேர்ந்தோராவர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.