ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாளை புதன்கிழமை இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
பாலியில் நடைபெறவுள்ள 5ஆவது ஜனநாயக மன்றத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டு அரசின் அழைப்பின் பேரிலேயே நவநீதம்பிள்ளை விஜயம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
2008ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான ஆணையாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்தோனேசியாவுக்கு முதல்தடவையாக நவநீதம்பிள்ளை விஜயம் செய்யவுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஐநா மனித உரிமைகளுக்கான ஆணையாளரொருவர் இந்தோனேசியாவின் ஜனநாயக மன்றத்தில் உரையாற்றவுள்ளமையும் இதுவே முதற்தடவை.
பாலி ஜனநாயக மன்றமானது பிராந்தியத்தின் சட்டம், நல்லாட்சி மற்றும் மனித உரிமைகளுக்கான முக்கிய களமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத் தொடரினை முடித்துக்கொண்டு இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவுக்கு விஜயம் செய்யும் நவநீதம்பிள்ளை அங்கு முக்கிய அரச உயரதிகாரிகள், தேசிய மனித உரிமை நிறுவன அதிகாரிகள், சமூக பிரதிநிதிகள் மற்றும் ஏனைய ஐநா நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடவுள்ளார்.
தனது இந்தோனேசிய விஜயத்தினை நிறைவுசெய்யும் இறுதிநாளான நவம்பர் 13ஆம் திகதி, ஜகர்த்தாவிலுள்ள ஐநா காரியாலயத்தில் ஊடக சந்திப்பொன்றையும் நவநீதம்பிள்ளை ஏற்பாடு செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.